மருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா

அரசு மருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கிய ஜோதிகா

by Bella Dalima 08-08-2020 | 4:56 PM
நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் பிரிவின் சீரமைப்பிற்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். இந்த உதவி அகரம் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்திற்காக சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்தே தன் பங்களிப்பாக 25 இலட்சம் ரூபா நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார் ஜோதிகா.