by Staff Writer 06-08-2020 | 9:06 AM
Colombo (News 1st) பலத்த மழை மற்றும் காற்றினால் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா, இரத்தினபுரி, பாதுக்க, கிரிஎல்ல, மத்துகம, ஹோமாகம, அவிசாவளை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக சில குழுக்களை நியமித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.
மின்சார விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள தடை காரணமாக வாக்கெண்ணும் பணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
வாக்கெண்ணும் நிலையங்களில் மின்பிறப்பாக்கிகளூடாக மின் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஹோமாகம பகுதியில் இன்று (06) வீசிய பலத்த காற்றினால் 90 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
10 கிராம சேவை பிரிவுகளிலுள்ள வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளதாக ஹோமாகம பிரசேத செயலாளர் தெரிவித்தார்.
பலத்த காற்று காரணமாக மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் களனிவௌி மார்க்கத்திலான போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.