லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் குண்டுவெடிப்பு

பெய்ரூட்டில் குண்டுவெடிப்பு: பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

by Bella Dalima 04-08-2020 | 10:21 PM
Colombo (News 1st) லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2005 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ரஃபிக் ஹரிரி கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு வௌியாகவுள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. நகரின் துறைமுகப் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இதேவேளை, இரண்டாவது குண்டு வெடிப்பு சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வௌியிட்டுள்ளனர். இணையத்தில் வௌியிடப்பட்டுள்ள காணொளியில் பாரிய புகைமூட்டம் காணப்படுவதுடன், சேதங்கள் ஏற்பட்டுள்ளமையும் பதிவாகியுள்ளன. கார்க்குண்டு மூலம் ஹரிரி கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு சந்தேகநபர்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் தீர்ப்பாயம் தயாராகவுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நான்கு சந்தேகநபர்களும் ஈரானிய ஆதரவுடைய ஹிஸ்புல்லா குழு உறுப்பினர்களாவர். அவர்கள் தமக்கும் ஹரிரியின் கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தீர்ப்பு எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஹரிரியின் இல்லத்தில் இரண்டாவது குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கக்கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பிற்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.