அதிகாரிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க தீர்மானம்

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க தீர்மானம்

by Staff Writer 04-08-2020 | 11:04 AM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளுடைய சொத்துக்களை அரசுடைமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரிகள் முறையற்ற வகையில் திரட்டிய பணத்தால் சேகரித்த சொத்துக்களையே அரசுடைமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். நிதி தூய்தாக்கல் சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தகவல்கள் தற்போது திரட்டப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 உத்தியோகத்தர்களும் இன்று (04) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். ஏனைய 08 உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் களஞ்சிய அறையிலிருந்து பெறப்பட்ட போதைப்பொருள் தொடர்பான அறிக்கையை பொதுத் தேர்தலின் பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 08 வாகனங்கள் குறித்தும் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் மிக இரகசியமாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.