by Staff Writer 04-08-2020 | 12:36 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக எதிர்கால சந்ததியினரின் கல்வியில் தலைமுறை பேரழிவு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
COVID - 19 தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார்.
இதனால், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு உலக நாடுகள் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் ஐ.நா. செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் உலகின் 160 நாடுகளிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், இதனால் பில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் 40 மில்லியனுக்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு ஆரம்பக்கல்வி இல்லாமற் போயுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
COVID -19 தொற்றுக்கு முன்னரான காலப்பகுதியிலும் 250 மில்லியனுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் பாடசாலை கல்வியை இழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார்.