ஹெரோயினுடன் கைதான 2 பேரை தடுத்து விசாரிக்க உத்தரவு

ஹெரோயினுடன் கைதான இருவரை தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு 

by Staff Writer 03-08-2020 | 5:01 PM
Colombo (News 1st) பொரலஸ்கமுவயில் ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது. கங்கொடவில நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (02) மதியம் கிடைத்த தகவலுக்கமைய காரொன்றின் மூலம் ஹெரோயினை கொண்டுசென்ற சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் இருவரும் 500 கிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர். இதன்பின்னர் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்த கோட்டையில் அமைந்துள்ள வீட்டிலிருந்து மேலும் 600 கிராம் ஹெரோயின் மற்றும் 300 போதைவில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, அஹூங்கல்ல பகுதியில் வீடொன்றில் இருந்து 4 கிராம் 130 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் ஆறு இலட்சத்து 95 ஆயிரம் ரூபா பணத்துடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.