வாக்குச்சாவடியில் குழப்பம் ஏற்பட்டால் நடப்பது என்ன

வாக்குச்சாவடியில் குழப்பம் ஏற்பட்டால் வாக்கெடுப்பை மீள நடத்த தயங்குவதில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்

by Staff Writer 03-08-2020 | 4:09 PM
Colombo (News 1st) வாக்களிப்பு நிலையங்களில் குழப்பங்கள் எதுவும் ஏற்படும் பட்சத்தில் அந்த வாக்களிப்பு நிலையத்தினதும் பிரதேசத்தினதும் வாக்களிப்பை இரத்து செய்வதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு வாக்களிப்பு இரத்து செய்யப்படும் வாக்களிப்பு நிலையத்தினதும் பிரதேசத்தினதும் வாக்களிப்பை மீண்டும் நடத்துவதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களில் ஏதோவொரு விதத்தில் குழப்பம் ஏற்படும் பட்சத்தில் அந்த வாக்களிப்பு நிலையத்தினதும் பிரதேசத்தினதும் வாக்களிப்பை இரத்து செய்து மீண்டும் வாக்கெடுப்பை நடத்த தயங்குவதில்லை. எந்த பகுதியிலும் வாக்களிப்பை நடத்தமுடியாத நிலை ஏற்படவில்லை. பொலிஸார் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர். குழப்பம் விளைவிப்பவர்களை பொலிஸார் தாமதமின்றி கைது செய்வர். எவருக்கேனும் அவ்வாறான எண்ணம் இருந்தால் மாற்றிக்கொள்ளுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இலங்கை பொலிஸார் தேர்தல் சட்டத்தை பாதுகாக்க எதற்காகவும் பின்னிற்பதில்லை. எந்த தரப்பினருக்கு எதிராகவும் அவர்கள் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவார்கள். நேற்று நள்ளிரவு முதல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளோம். அதேபோன்று அலுவலகங்களிலுள்ள பிரசார போஸ்டர்களை அகற்ற வேண்டும். அத்துடன் வாக்களிப்பு நிலையத்தில் இருந்து 500 மீற்றர் இடைவௌிக்குள் போஸ்டர்களுக்கு அனுமதியில்லை. நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் எம்மோடு இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இந்த அமைதிக் காலப்பகுதியை பாதுகாக்குமாறு சமூகவலைத்தள பதிவிடுவோர் மற்றும் Youtube செனல்களின் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்
என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய விளக்கமளித்துள்ளார்.