அனுருத்த சம்பாயோவிற்கு விளக்கமறியல்

அனுருத்த சம்பாயோவிற்கு விளக்கமறியல்

by Staff Writer 03-08-2020 | 3:31 PM

Colombo (News 1st) 

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ நாளை (04) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜீ. குணதாச முன்னிலையில் சந்தேக நபர் இன்று (03) ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனுருத்த சம்பாயோவை கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 11 நாட்களின் பின்னர் நீர்கொழும்பு பொலிஸ் அதிகாரிகளினால் சந்தேக நபர் நேற்று (02) குருணாகலில் கைது செய்யப்பட்டார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடமையாற்றிய பிரதம சிறைக்காவலர் உபாலி சரத் பண்டார, இரண்டாம் நிலை சிறைக்காவலர் நிஷாந்த சேனாரத்ன மற்றும் சிறைக்காவலராக கடமையாற்றிய பிரசாத் காலிங்க களுஅக்கல உள்ளிட்ட அதிகாரிகள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.