மகாராஜா தலைமையகத்தில் எழுந்தருளினார் முருகபெருமான்

வேலாயுத பெருமான் கெப்பிட்டல் மகாராஜா தலைமையகத்தில் எழுந்தருளினார்

by Staff Writer 02-08-2020 | 8:40 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்திற்கான பவனியை ஆரம்பித்த வேலாயுதப் பெருமான், இன்று (02) முற்பகல் வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகத்தில் எழுந்தருளினார். கொழும்பு - ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் இருந்து இன்று காலை கொழும்பு - 2, பிரேபுரூக் பிளேஸிலுள்ள வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா நிறுவன தலைமையகத்தை வேலாயுதப் பெருமான் வந்தடைந்தார். வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமத் திருத்தலத்திற்கான யாத்திரையை குறிக்கும் வகையில் வருடாந்தம் வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆடிவேல் சக்திவேல் பவனி இடம்பெறுகின்றது. நாட்டில் நிலவும் COVID -19 நிலைமை காரணமாக இம்முறை பவனி ஆலயங்களில் பூஜைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேலாயுதப் பெருமானுக்கு நித்திய ஆலயத்திற்கு அருகே சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த வேலாயுதப் பெருமானுக்கு தீபாராதனை, வேத மந்திர, திருமுறை பாராயணம் நடைபெற்றது. பின்னர் கதிர்காமத் திருத்தலத்தை நோக்கி வேல் பெருமான் புறப்பட்டார். ஆடிவேல் சக்திவேல் பவனி பம்பலப்பிட்டி வஜிரா பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்ததும் சிறப்பு பூஜை நடைபெற்றது. களுத்துறை கந்தசுவாமி ஆலயத்திற்கும் வேலாயுதப் பெருமான் எழுந்தருளினார். ஆடிவேல் சக்திவேல் பவனி இன்று ஹம்பாந்தோட்டை ஶ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தை சென்றடைந்தது. நாளை (03) காலை ஹம்பாந்தோட்டையிலிருந்து செல்லக் கதிர்காமத்தை வேல் பவனி சென்றடையவுள்ளது,. பின்னர் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் நடைபெறவுள்ள சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் இந்த வருடத்திற்கான ஆடிவேல் சக்திவேல் பவனி நிறைவுபெறவுள்ளது.