தேர்தலில் புள்ளடியிட பேனாவைக் கொண்டு செல்ல அனுமதி

பொதுத்தேர்தலில் புள்ளடியிட பேனாவைக் கொண்டு செல்ல அனுமதி

by Staff Writer 01-08-2020 | 3:25 PM
Colombo (News 1st) இம்முறை பொதுத்தேர்தலில் புள்ளடியிடுவதற்கு தேவையேற்படின் பேனாவைக் கொண்டு சென்று பயன்படுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நீலம் அல்லது கறுப்பு நிற குமிழ்முனைப் பேனாவை வாக்காளர்கள் பயன்படுத்த முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. வாக்களிப்பின் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் கடந்த ஆறு மாத இடைவௌிக்குள் காலாவதியாகியிருந்தாலும் அதனைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதனிடையே, பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதற்கிணங்க, தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்துதல், ஒன்றுகூடுதல், வீடுகளுக்கு சென்று பிரசார செயற்பாடுகளில் ஈடுபடுதல், கையேடுகளைப் பகிர்ந்தளித்தல், வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களில் பிரசார பதாதைகளைக் காட்சிப்படுத்துதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.