சீனா, ரஷ்யாவின் தடுப்பு மருந்துகள் வேண்டாம்

சீனா, ரஷ்யா தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தப் போவதில்லை: அமெரிக்கா தெரிவிப்பு

by Bella Dalima 01-08-2020 | 5:58 PM
Colombo (News 1st) சீனா மற்றும் ரஷ்யாவினால் உருவாக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தப் போவதில்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவைத் தவிர்ந்த வேற்று நாடுகளில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்துகளை பயன்படுத்தத் தாம் விரும்பவில்லையென அமெரிக்க தொற்றுநோய்கள் தொடர்பான நிபுணர் டொக்டர் அந்தனி பவுசி தெரிவித்துள்ளார். குறித்த நாடுகளின் வௌிப்படைத்தன்மையற்ற ஒழுங்குபடுத்தல் முறைமைகள் காரணமாகவே இந்த நிலைப்பாடு தோன்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். COVID-19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சிகளில் பெருமளவான சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதேபோன்று, தமது சுய தயாரிப்பிலான தடுப்புமருந்தை அறிமுகப்படுத்தும் திகதியை, ரஷ்யா, செப்டம்பர் மாதத்தில் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினையடுத்து, உலக சுகாதார ஸ்தாபனத்தினால், உலகளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ளன. இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் 6 இலட்சத்து 79 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், 17.9 மில்லியனுக்கும் அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பல தசாப்தங்களுக்கு உணரப்படுமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மேற்கு ஐரோப்பிய நாடுகள் மீளவும் முடக்கல் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி வருகின்றன.