by Staff Writer 31-07-2020 | 7:13 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மொனராகலை மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகள் சிலவற்றில் இன்று பங்கேற்றிருந்தார்.
ஜனாதிபதி கலந்துகொண்டிருந்த மக்கள் சந்திப்புகளில் முதலாவது சந்திப்பு தனமல்வில தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட அமைப்பாளர் ஷஷீந்திர ராஜபக்ஸவின் ஏற்பாட்டில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை பாடசாலையின் அதிபரும் மாணவர்களும் வரவேற்றனர்.
பாடசாலையில் உள்ள குடிநீர்ப் பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.
அதன் பின்னர், ஜனாதிபதி கணமுல்வில பொது விளையாட்டரங்கிற்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த மக்கள் சந்திப்பை பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஜகத் புஷ்பகுமார ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது, காட்டு யானைகளின் பிரச்சினை, காணி உறுதிப்பத்திரங்கள் இன்மை உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
அதன் பின்னர் ஜனாதிபதி வெல்லவாய அதிலிவவெ தெலுல்ல போதிராஜராம விகாரைக்கு அருகிலுள்ள மைதானத்தில் மக்கள் சந்திப்பில் பங்கேற்றார்.
செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலையிலும் குறித்த பகுதியிலும் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் மக்கள் முறையிட்டனர்.