கொழும்பு துறைமுக செயற்பாடுகள் நிறுத்தம்

கொழும்பு துறைமுக செயற்பாடுகள் நிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு 

by Staff Writer 31-07-2020 | 5:17 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. கிழக்கு முனையம் தொடர்பில் தௌிவான பதில் ஒன்றை எதிர்பார்த்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகக் கைத்தொழில் மற்றும் தொழில் முற்போக்கு சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் சாமல் சுமனரத்ன குறிப்பிட்டார். இதன் காரணமாகவே இன்று பகல் தொடக்கம் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கான வீதியிலுள்ள பாலத்திற்கருகில் தாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். கிழக்கு முனையம் தொடர்பில் ஜனாதிபதியினூடாக தீர்க்கமான பதில் கிடைக்கும் வரை தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என துறைமுக ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் குறிப்பிடுகின்றன. கொழும்பு துறைமுகத்தின் மூன்று முனையங்களினதும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய நட்டம் ஏற்படும் என வர்த்தக கைத்தொழில் மற்றும் தொழில் முற்போக்கு சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் சாமல் சுமனரத்ன சுட்டிக்காட்டினார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதனூடாக , எதிர்கால சந்ததியினர் பாரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என துறைமுக ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர். கொழும்பு துறைமுக செயற்பாடுகளை துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி ஊழியர்களால் தொடர்ந்து மூன்று நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.