ஆப்கானிஸ்தானில் கார் குண்டுத்தாக்குதல்:17 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதல்: 17 பேர் பலி

by Bella Dalima 31-07-2020 | 4:27 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் 17 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கியதில் இருந்தே ஆப்கானிஸ்தான் அரச படைக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டு வந்தது. இதற்கிடையே, போரை நிறுத்த தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தலிபான் பயங்கரவாத அமைப்பு மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இந்த மாத இறுதிக்குள் தனது படைவீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய லோகார் மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை மர்ம நபர்கள் வெடிக்கச் செய்துள்ளனர். இந்த தாக்குதலில் 17-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலுக்கு தாம் பொறுப்பேற்க முடியாதென தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.