by Staff Writer 31-07-2020 | 3:16 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற விசாரணையின் போது துப்பாக்கி தொடர்பான விசாரணைகளுக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்து சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட சிலருக்கு எதிராக துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்ததுடன், அதன் பின்னர் குற்றச்சாட்டின் கீழ் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கம்பஹா கலகெடிஹேன பகுதியில் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவை இருந்த இடத்தில் வசித்துவந்த இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பான சாட்சிகளின் போது தெரியவந்த விடயங்களுக்கு அமைவாக ஷானி அபேசேகரவுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் விசாரணை ஒன்றை ஆரம்பித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.