வேகக் கட்டுப்பாட்டை பேணாத வாகனங்களுக்கு எச்சரிக்கை

வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் வாகனங்களின் வர்த்தக அனுமதிப்பத்திரம் இரத்து

by Staff Writer 30-07-2020 | 10:56 AM
Colombo (News 1st) அதிக வேகத்துடன் பயணிக்கும் கொள்கலன் உள்ளிட்ட வாகனங்களின் வர்த்தக அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகன விபத்துகள் அதிகரித்து செல்வதை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 வருடங்களில் கொள்கலன் மற்றும் டிப்பர் வாகனங்களில் மாத்திரம் 1,845 விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார். பாரவூர்திகளை கவனயீனத்துடன் செலுத்துவதால் இவ்வாறான விபத்துகள் நேரிடுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். போட்டியுடன் வாகனங்களை செலுத்துவதாலேயே, அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாடுகளுடன், குறித்த வாகனங்கள் பயணிக்க வேண்டும் எனவும் அவ்வாறில்லையெனின், வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட வர்த்தக அனுமதிப்பத்திரத்தையும் இரத்து செய்வதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.