by Staff Writer 30-07-2020 | 4:22 PM
Colombo (News 1st) கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் அரச வங்கி ஒன்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
60 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையின் போது குறித்த கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டதாக வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பாலத்த பண்டார குறிப்பிட்டார்.
லங்காபுர பிரதேச செயலகத்தில் சேவையாற்றிய அலுவலக உதவியாளர் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கந்தக்காடு கொரோனா நோயாளர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளை அந்நபர் பேணியதாகக் கூறப்பட்டுள்ளது.
புதிய கொரோனா நோயாளருடன் சேவையாற்றியவர்களையும் அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து மேலும் 16 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,333 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 467 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.