by Staff Writer 29-07-2020 | 5:29 PM
Colombo (News 1st) லக்ஸபான வாழைமலை தோட்டத்தில் பொறியில் சிக்கி கருஞ்சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினராக முன்னிலையாவதற்கு அனுமதி கோரி ஓமல்பே சோபித தேரர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் கோரிக்கை மனுவொன்றை இன்று தாக்கல் செய்தார்.
இலங்கைக்கே உரித்தான கருஞ்சிறுத்தை ஒன்று மே மாதம் 26 ஆம் திகதி லக்ஸபான - வாழைமலை தோட்டத்தில் பொறியில் சிக்கி உயிரிழந்தது.
இது தொடர்பாக நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்த B அறிக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஶ்ரீ போதிராஜ மன்றம் மற்றும் சுற்றாடல், கலாசார, கல்வி மத்திய நிலையம் சார்பில் நீதவான் முன்னிலையில் ஆஜரான தரப்பினர் விடயங்களை சமர்ப்பித்திருந்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்னிலையாவது தொடர்பான நிலைப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அதற்கு முன்னதாக இது தொடர்பில் விடயங்கள் ஏதுமிருந்தால் அதனை எழுத்துமூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஹட்டன் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.