பாதாளக்குழுக்களை ஒடுக்க கிராமமட்டத்தில் தகவல் தேவை

பாதாளக் குழுக்களை ஒடுக்குவதற்கு கிராம மட்டத்தில் தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

by Staff Writer 29-07-2020 | 8:08 PM
Colombo (News 1st) களுத்துறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் சந்திப்புகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று கலந்துகொண்டார். அரச சேவையில் உள்ள ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் மஹிந்த சமரசிங்க, பாணந்துறை - வாழைத்தோட்டம் பிரதேச விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதி களுத்துறைக்கான விஜயத்தை ஆரம்பித்தார். இறக்குமதி வர்த்தக முறைமைக்கு பதிலாக உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவமளிக்கும் பொருளாதார முறைமையை ஏற்படுத்தும் செயற்பாட்டினை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதால், விவசாயம் மற்றும் உற்பத்தி துறைகளில் ஈடுபட்டு அதிகபட்ச பலனை பெற்றுக்கொள்ளுமாறு இதன்போது ஜனாதிபதி மக்களிடம் கூறினார். இதேவேளை, பாதாளக் குழுக்களை ஒடுக்குவதற்கு தாம் முயற்சிகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கு கிராம மட்டத்தில் தகவல்கள் தேவைப்படுவதாகக் கூறினார். பின்னர் பாணந்துறை நகர சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஜகத் அங்ககே இந்த மக்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். முன்னாள் அமைச்சர் ஜயந்த சமரவீர பாணந்துறை கொரொஸ்தூவ விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக வாக்குறுதியளித்தார். உயர்தர வகுப்பு மாணவர்கள் முன்வைத்த பிரச்சினைகளையும் ஜனாதிபதி செவிமடுத்தார். இதேவேளை, களுத்துறை தாதியர் கல்லூரியை புனரமைப்பது தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.