கொரோனா: ஹொங்கொங்கில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்

கொரோனா வைரஸ்: ஹொங்கொங்கில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்

by Chandrasekaram Chandravadani 29-07-2020 | 9:10 AM
​Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகளை ஹொங்கொங் அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மைய நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளுக்கு அமைய இன்றிலிருந்து உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெவ்வேறு வீடுகளில் வசிக்கும் இருவர் மாத்திரமே சந்தித்துக்கொள்ள முடியுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொது இடங்கள் அனைத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியிருந்த ஹொங்கொங்கில் தற்போது நாளாந்தம் நூற்றுக்கும் அதிகமாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக இம்மாத ஆரம்பத்தில், மதுபானசாலைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், அழகுபடுத்தல் நிலையங்கள் என்பன மூடப்பட்டன. ஹொங்கொங்கில் நேற்றைய தினம் 106 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 23 மரணங்களும் சம்பவித்திருந்தன.