by Bella Dalima 28-07-2020 | 5:45 PM
Colombo (News 1st) இந்திய தகவல் தொடர்பாடல் அமைச்சு மேலும் 47 சீன செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேலும் 47 செயலிகளுக்கு மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளதுடன், தடை செய்யப்பட்டுள்ள சீன செயலிகளின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் எல்லைப் பிராந்தியமான லடாக்கில் சீன ஊடுருவலுக்கு பின்னர் மத்திய அரசு நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகத் தெரிவித்து சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மேலும் பொழுதுபோக்கு செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது என இராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தொழில்நுட்பப் பாதுகாப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது.
இந்த நிலையில், PUBG உள்ளிட்ட மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பில் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.