போதைப்பொருள்: தகவல் வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

போதைப்பொருள் பாவனையைத் தடுக்க தகவல் வழங்குமாறு ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை

by Staff Writer 28-07-2020 | 8:13 PM
Colombo (News 1st) கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் மக்கள் சந்திப்புகள் சிலவற்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று பங்கேற்றார். இதன்போது மக்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, போதைப்பொருள் பாவனையைத் தடுக்க அச்சமின்றி தகவல்களை வழங்கும்படி கோரினார். முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தலவத்துகொட பகுதியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார். பிரதேசத்தில் நிலவும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்ட இளைஞர் சமுதாயத்தை பாதுகாக்குமாறு இதன்போது பிரதேச மக்கள் கோரிக்கையொன்றையும் முன்வைத்தனர். சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளின் பராமரிப்பிற்கு அரசாங்கம் செலவழிக்காமல், அவர்களை பொருளாதார உற்பத்திக்காக பயன்படுத்தி செலவுகளை ஈடு செய்வதற்கான முறைமை தொடர்பில் மக்கள் இதன்போது யோசனையொன்றையும் முன்வைத்தனர். பாடசாலை மாணவர்களின் அதிக நிறைகொண்ட பாடசாலை பை தொடர்பில் கவனம் செலுத்துமாறு இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 47 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.திலகரத்ன உள்ளிட்ட சிலர் இதன்போது ஜனாதிபதியின் செயற்திட்டங்களுக்கு ஆதரவு நல்கினர். பாராளுமன்ற வேட்பாளர் மதுர விதானகே, கோட்டே நகர சபை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்றார். அதன் பின்னர் நுகேகொடவில் நடைபெற்ற நிகழ்வில் வேட்பாளர் ஜனக ரணவக்கவிற்கு ஜனாதிபதி ஆதரவு வழங்கினார்.