பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 27-07-2020 | 6:43 PM
Colombo (News 1st) பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி டி. சூசைதாசன் முன்னிலையில் சந்தேக நபர்கள் இன்று (27) ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா என்றழைக்கப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம். கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க ஆகியோரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.