ஜோர்தானில் இலங்கையர் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் 

by Staff Writer 27-07-2020 | 10:23 PM
Colombo (News 1st) கொரோனாவினால் தொழிலை இழந்த நிலையில் ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கை பணியாளர்கள் சிலர் மீது அந்நாட்டு பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இலங்கை தூதரக அதிகாரிகள் சிலர், பணியாளர்களுடன் கலந்துரையாட சென்ற சந்தர்ப்பத்தில் பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை வழங்கவில்லை என தெரிவித்து பணியாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டமையே இதற்கான காரணமாகும். ஜோர்தானின் அல்காரா கெமல்வெகா தொழில்பேட்டையில் தொழிலை இழந்துள்ள சுமார் 500 இலங்கையர்கள் தங்கியுள்ள பகுதியில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தொழிலை இழந்து சில மாதங்களாகியுள்ள போதிலும், தாய் நாட்டிற்கு திரும்ப முடியாதுள்ளதாக இலங்கையர்கள் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனியவிடம் வினவியபோது, தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பணம் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். இவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.