ஆரம்ப பாடசாலைக் கட்டமைப்பை அமைச்சின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 25-07-2020 | 3:29 PM
Colombo (News 1st) ஆரம்ப பாடசாலைக் கட்டமைப்பை அமைச்சின் கீழ் கொண்டு வந்து பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விஜயம் செய்த அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சிறுவர்களின் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தும் முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்வது அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.