IDH வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளர் கண்டுபிடிப்பு

by Staff Writer 24-07-2020 | 3:43 PM
Colombo (News 1st) முல்லேரியா IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே அந்நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர், கொரோனா நோயாளர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலையைச் சேர்ந்த L. சியாம் நசீம் எனும் 41 வயதான குறித்த நபர், இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் இடம்பெற்ற உடனேயே அவரது நிழற்படம் மற்றும் தகவல்களை பொலிஸார் பகிரங்கப்படுத்தியிருந்தனர். கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்றுவந்த அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததால், முல்லேரியா IDH வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். IDH வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற இவர் கொழும்பு மெயின் வீதியிலிருந்து முச்சக்கரவண்டி மூலம் தேசிய வைத்தியசாலையை அண்மித்த பகுதிக்கு சென்றுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஊழியர்கள் இருவர் இந்நபரை அடையாளம் கண்டு வழங்கிய தகவலுக்கு அமைவாக பாதுகாப்பு தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டார். இந்நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் எனவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, அவரை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி சாரதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த நபரை கண்டுபிடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தேசிய வைத்தியசாலையின் நிர்வாகத்தினருக்கும் இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பதில் பொலிஸ் மா அதிபரினால் பணப்பரிசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.