பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்: பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை

by Staff Writer 24-07-2020 | 7:58 PM
Colombo (News 1st) பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறை பெற்று இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். அண்மையில் வௌியிடப்பட்ட தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, தமது தொழிலுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளில் இருந்து பொது சுகாதார பரிசோதகர்கள் விலகியுள்ளனர். இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் எவற்றுக்கும் உரிய வகையில் தீர்வு கிடைக்கவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன குறிப்பிட்டார். நண்பர்கள் மற்றும் நம்பிக்கைக்கு உரித்தானவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் செயற்பாட்டையே சுகாதார அமைச்சு தற்போது முன்னெடுத்துள்ளதாக மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனை நிபுணர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குற்றம் சாட்டினார். இதேவேளை, தேர்தலை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரச ஊழியர்களின் உதவியை எதிர்பார்த்தால், இந்த பிரச்சினைக்கான தீர்வை உடனடியாகப் பெற்றுக்கொடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் தபால் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சிந்தன பண்டார கோரிக்கை விடுத்தார்.