வவுனியா ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையிலான ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை

by Staff Writer 24-07-2020 | 4:31 PM
Colombo (News 1st) அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையிலான ரயில் மார்க்கத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சில் இன்று இடம்பெற்ற ரயில் மார்க்கங்களை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான மதிப்பீட்டுக் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்ததாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் மார்க்கத்தில் ரயில்கள் மிக வேகமாக பயணிக்க முடியும். அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையிலான ரயில் மார்க்கம் நவீனமயப்படுத்தப்படாததால், அந்த பகுதி மிகவும் பாழடைந்து காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனால் அநுராதபுரம் - வுவனியா ரயில் மார்க்கத்தை சில மாதங்களுக்கு மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்தத் தேவையான தண்டவாளங்கள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டையில் இருந்து கதிர்காமம் வரையான ரயில் மார்க்கத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.