முன்வரிசை ஆசனப் பிரச்சினை: பொதுஜன பெரமுன மக்கள் சந்திப்பில் அமைதியின்மை

by Staff Writer 23-07-2020 | 8:33 PM
Colombo (News 1st) கந்தளாய் நகரில் பொதுஜன பெரமுன இன்று நடத்திய மக்கள் சந்திப்பின் போது அமைதியின்மை ஏற்பட்டது. இம்முறை பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுகின்ற ஆரியவதி கலப்பதிக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படாமையே இதற்கு காரணமாகும். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதிப்படுத்தும் மக்கள் சந்திப்பு இன்று கந்தளாய் நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மக்கள் சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பொதுஜன பெரமுன பட்டியலில் போட்டியும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஆரியவதி கலப்பதிக்கு மேடையில் பின்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்ததால் அவர் ஆத்திரமடைந்தார். பின்னர் அவர் மேடையில் ஏறி ஏற்பாட்டாளர்களைக் குறைகூறினார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூட்டத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஆரியவதி கலப்பதிக்கு அவர் அருகிலேயே அமர்வதற்கான ஒழுங்குகளை ஏற்பாட்டாளர்கள் செய்து கொடுத்தனர்.