ஐஸ் போதைப்பொருளுடன் மதுவரி திணைக்கள அதிகாரி கைது

ஐஸ் போதைப்பொருளுடன் மதுவரி திணைக்கள அதிகாரி உட்பட 7 பேர் கைது

by Staff Writer 23-07-2020 | 1:20 PM
Colombo (News 1st) ஐஸ் போதைப்பொருளுடன் கலால்வரி திணைக்கள அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிராந்திய ஊழல் ஒழிப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் வசமிருந்த 150 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்களில் 4 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேக நபர்கள் வருகை தந்த வேனும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கடத்தலுடன் மற்றுமொருவர் தொடர்புபட்டுள்ளதுடன், அவர் இதன் போது காரில் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச்சென்ற சந்தேக நபர் புத்தளம் கலால்வரி அலுவலகத்துடன் இணைந்த வகையில் கடமையாற்றும் கலால்வரி திணைக்கள அதிகாரியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தப்பிச்சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கலால்வரி திணைக்கள அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அவருக்கு ஏற்கனவே தண்டனை அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்ததுடன் அவர் வவுனியா கலால்வரி அலுவலகத்துடன் இணைந்த வகையில் கடமையாற்றியவர் என கலால்வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.