மரக்கறி வகைகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதி

by Staff Writer 21-07-2020 | 7:57 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று நுவரெலியாவில் மக்களை சந்தித்தார். மரக்கறிக்கான சிறந்த விலை கிடைக்கும் வகையில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி இதன்போது மக்களுக்கு உறுதியளித்தார். இம்முறை பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதிப்படுத்தும் மக்கள் சந்திப்பு இன்று முற்பகல் வலப்பனை வாரச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது. விவசாயிகளின் பிரச்சினை மாத்திரமல்லாது, வங்கிக் கடன் தொடர்பிலும் இதன்போது அங்கு வந்திருந்தவர்கள் ஜனாதிபதியை தௌிவுபடுத்தினர். பொரமடுல்ல மத்திய கல்லூரி விளையாட்டரங்கிற்கு சென்ற ஜனாதிபதி, விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இராணுவத் தளபதிக்கு பணிப்புரை விடுத்தார். பின்னர் அங்கு வந்திருந்த மக்களையும் ஜனாதிபதி சந்தித்தார். ரிகில்லகஸ்கட பிரதேச சபை விளையாட்டரங்கில் மக்களை சந்திப்பதற்காக வருகைதந்த ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து கந்தப்பளை சந்தையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்றார். கந்தப்பளையில் இருந்து நுவரெலியா வரையான வீதியின் இரு மருங்கிலும் ஜனாதிபதியை வரவேற்பதற்காக மக்கள் கூடியிருந்தனர். நுவெரலியா - கிரகரி குளத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துகொண்டார். ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளித்த மக்கள், நுவரெலியாவில் சுற்றுலாத்துறை, மற்றும் சுயதொழில் துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினர். நுவரெலியாவை அண்மித்த மலைப்பகுதியில் இடம்பெறுகின்ற சுற்றாடல் அழிப்பு தொடர்பிலும் மக்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.