கருணாவை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

by Staff Writer 21-07-2020 | 4:54 PM
Colombo (News 1st) கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை உடனடியாகக் கைது செய்து, சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி கடுவளை நகர சபை உறுப்பினர் போசெத் கலெஹிபத்திரன தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி A.H.M.D.நவாஸ் மற்றும் நீதிபதி சோபித்த ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதிவாதியான கருணா அம்மானிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த குற்றத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை அவதானிக்க முடிவதாகவும் தெரிவித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, வேட்பாளர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை நீதிமன்றத்திற்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதனடிப்படையில், பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிக்காது, மனுவை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.