ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று

by Staff Writer 20-07-2020 | 8:43 PM
Colombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயம் மற்றும் மட்டக்களப்பு அமிர்த்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் இன்று (20) ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய காம்யோற்சவத்தின் தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசை தினமான இன்று காலை நடைபெற்றது. மாவை கந்தன் வள்ளி தெய்வானை சமேதராய் யாழ். கீரிமலை புனித கண்டகி தீர்த்தக் கரைக்கு எழுந்தருளினார். கீரிமலை நகுலேஸ்வர பெருமான் உமாதேவியார் சமேதராய் எழுந்தருள கீரிமலை கடற்கரையோரமாக வீற்றிருக்கும் முத்துமாரியம்மனும் தீர்த்தக் கரைக்கு எழுந்தருளினார். பின்னர் அடியார்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் வகையில் மாவை கந்தன் கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தமாடினார். இதன்போது பக்தர்களுக்கான சுகாதார ஒழுங்குபடுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதேவேளை, மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவமும் இன்று நடைபெற்றது. விசேட பூஜை வழிபாடுகளை அடுத்து ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளிய மாமாங்க பிள்ளையார் பக்தர்களுடன் தீர்த்தமாடினார்.