யாழில் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மோதல்; மட்டக்களப்பில் கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு

by Staff Writer 18-07-2020 | 10:17 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நுணாவில் பகுதியில் இரு அரசியல் கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். தேர்தல் பிரசார சுவரொட்டி ஒட்டுதலை அடிப்படையாகக் கொண்டு நேற்றிரவு 11.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இதன்போது சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் கட்சி அலுவலகமொன்றுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 7 முப்பது அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தின் போது தீ வைக்கப்பட்ட அலுவலகத்திற்கு அருகில் உள்ள உணவகமொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.