கந்தக்காடு: 64 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் 64 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று

by Staff Writer 18-07-2020 | 4:05 PM
Colombo (News 1st) கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளதாக COVID-19 தொற்று ஒழிப்பு தொடர்பான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இவர்களில் 444 பேர் புனர்வாழ்வு பெற்றவர்களாவர். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் 64 பணியாளர்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களுடன் பழகிய 44 பேரும் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 1,32,796 பேருக்கு PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,697 ஆக அதிகரித்துள்ளது. COVID-19 தொற்றுக்குள்ளான 10 நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 663 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,023 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, துபாய் மற்றும் டோஹாவிலிருந்து இரண்டு விமானங்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளன. இந்த விமானங்களில் வருகை தந்தவர்கள், இலங்கை இராணுவத்தால் பராமரிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, பெல்வேஹர தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 104 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்ட 23,286 பேர் இதுவரை கண்காணிப்பு நிலையங்களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.