தேயிலை உற்பத்திகளை மீள ஆரம்பிக்குமாறு ஆலோசனை

மத்திய மாகாணத்தில் தேயிலைத் தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு பிரதமர் ஆலோசனை

by Staff Writer 17-07-2020 | 5:41 PM
Colombo (News 1st) மத்திய மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார். உரிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து, ஒரு வார காலத்திற்குள் தேயிலைத் தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பிரதமர், தேயிலை சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். உரிய சோதனையின்றி மத்திய மாகாணத்தில் 13 தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கு தேயிலை சபை நடவடிக்கை எடுத்துள்ளதால், சுமார் ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது மத்திய மாகாண தேயிலை தொழிலாளர்கள் கூறியுள்ளனர். குறித்த தேயிலை தொழிற்சாலைகள் தொடர்பில் தனித்தனியாக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சட்டவிரோதமான முறையில் தொழிற்சாலைகளுக்குள் தேயிலை உற்பத்திகள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் கூறியுள்ளார்.