ஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகம்: தாய்க்கும் சிறிய தந்தைக்கும் விளக்கமறியல்

by Staff Writer 17-07-2020 | 5:24 PM
Colombo (News 1st) நீர்கொழும்பு - பெரியமுல்ல பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயும் குழந்தையின் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டிருந்தனர். இருவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரியமுல்ல பகுதியில் உள்ள பாலமொன்றுக்கு அருகில் கடந்த 13 ஆம் திகதி குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டதுடன், குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அதற்கமைய, சம்பவம் தொடர்பில் குழந்தையின் 22 வயதான தாயும் சிறிய தந்தையான 22 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.