கன்னியா வெந்நீருற்று காணி விவகாரம்: வழக்கு செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 16-07-2020 | 8:35 PM
Colombo (News 1st) திருகோணமலை, கன்னியா வெந்நீருற்றின் சர்ச்சைக்குரிய காணி விவகாரம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொல்பொருள் திணைக்களம் சார்பாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்ரு மன்றில் ஆஜராகினார். வழக்கை தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரினார். கோவில் சார்பாக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், குறித்த காணி இந்துக் கோவிலுக்கே சொந்தமானது என வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.