மாணவர்கள் குறித்த அமெரிக்க திட்டம் கைவிடப்பட்டது

வௌிநாட்டு மாணவர்களை மீள அனுப்பும் அமெரிக்காவின் திட்டம் கைவிடப்பட்டது

by Staff Writer 15-07-2020 | 12:09 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வௌிநாட்டு மாணவர்களை மீளவும் அவர்களது நாடுகளுக்கே அனுப்பும் திட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் கைவிட்டுள்ளது. குறித்த திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தின் பின்னர் அது கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹவார்ட் பல்கலைக்கழகமும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஒன்றும் வழக்கு தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, கட்சிக்காரர்கள் உடன்பாடொன்றுக்கு வரவேண்டுமென உத்தரவிட்டார். இந்தநிலையில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய, சட்டரீதியாக மாணவர் விசாவுடன் அமெரிக்காவில் உள்ளவர்கள், தேவையேற்படின் வகுப்புக்களுக்கு சமூகமளிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் நடவடிக்கைகளை முழுவதுமாக இணையத்தளத்தினூடக மேற்கொள்வதற்கான மாற்றங்களை செய்துள்ள கற்கைநெறிகளைப் பயிலும் வௌிநாட்டு மாணவர்கள், அமெரிக்காவை விட்டு வௌியேற வேண்டுமென்ற உத்தரவு கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.