நாட்டில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 15-07-2020 | 7:04 AM
Colombo (News 1st) நாட்டில் நேற்று (14) மேலும் 19 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 9 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களோடு தொடர்பிலிருந்தவர்களாவர். நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில், சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்திலுள்ள மேலும் நால்வரும் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாட்டுக்கு வருகை தந்த இருவரும் அடங்குகின்றனர். இதனிடையே, 16 மாவட்டங்களில் 3,000 இற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளர்களோடு தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தைச் சேர்ந்தோரின் குடும்ப உறுப்பினர்களே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கம்பஹா, பொலன்னறுவை, காலி, கொழும்பு, இரத்தினபுரி, குருணாகல், களுத்துறை, கண்டி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணம், மொனராகலை, கேகாலை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிலரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மாவட்டங்களிலுள்ள மக்கள், சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் போனால், நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக பரவல் தொடர்பில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் இதுவரை 2,665 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதேநேரம் 2,001 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கந்தக்காட்டில் மாத்திரம் 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.