பரீட்சைகளுக்கான திகதிகள் குறித்த தீர்மானம் இன்று

புலமைப்பரிசில் மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கான திகதிகள் குறித்த தீர்மானம் இன்று

by Staff Writer 14-07-2020 | 12:21 PM
Colombo (News 1st) இம்முறை கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றிற்கான திகதிகள் இன்று (14) அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு பரீட்சை திகதிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீள திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உயர் தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளும் தாமதமாகும் என அவர் குறிப்பிட்டார். உயர் தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை ஒரே சந்தர்ப்பத்தில் நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர கூறியுள்ளார். எனினும் பாடசாலைகள் ஆரம்பமாவதில் தாமதமானால் புலமைப்பரிசில் பரீட்சையை தனியாக நடத்தவேண்டி ஏற்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை, கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் மீள திறக்கப்படாவிடில் வீடுகளில் இருந்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு புதிய ஆலோசனை அறிக்கை ஒன்றை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.