தபால் மூல வாக்களிப்பு இரண்டாவது நாளாக  இடம்பெற்றது 

by Staff Writer 14-07-2020 | 8:22 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது. 2020 பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றதுடன், கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் வாக்களித்தனர். சுகாதார அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட்டு தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று இரண்டாவது நாளாக தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது. இதேவேளை, புத்தளம் நகரசபையில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும் இன்று தபால் மூலம் வாக்களித்தனர். சமூக இடைவெளிகளைப் பேணியவாறு, முகக்கவசங்களை அணிந்து வாக்காளர்கள் வருகை தந்திருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். மாத்தறை கல்விப் பணிமனையிலும் தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றது. சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றியவாறு வாக்களார்கள் தமது வாக்குகளை அளித்தனர். குருணாகல் - மல்லவப்பிட்டிய பிரதேச செயலகத்திலும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது. இந்நிலையில், இராஜாங்கனை, வெலிக்கந்த மற்றும் அக்போபுர தபால் நிலையங்களிலிருந்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்தது. அங்கு கொரோனா நோயாளர்கள் பதிவானதை அடுத்து, பயண வரையறை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.