வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம் 

வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம் 

by Staff Writer 13-07-2020 | 4:03 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுமென பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்காளர்களின் வீடுகளுக்கே வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக தபால் திணைக்களத்தின் 75,000 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள், கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 29 ஆம் திகதியின் பின்னர் தபால் ஊழியர்களினூடாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட மாட்டாது என பிரதி தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே, உரிய காலப்பகுதியில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், தாம் வசிக்கும் பகுதியிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று ஆள் அடையாளத்தை உறுதிசெய்து அவற்றை பெற்றுக் கொள்ள முடியுமென பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான இரண்டு விசேட தினங்களாக எதிர்வரும் 19 மற்றும் 26 ஆம் திகதிகள், தபால் திணைக்களத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந் நாட்களில் வாக்காளர்கள் தத்தமது வீடுகளில் இருந்து தபால் திணைக்களத்தால் விநியோகிக்கப்படும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை கையொப்பத்துடன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.