அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று 

by Staff Writer 12-07-2020 | 6:41 AM
Colombo (News 1st) பிரபல பொலிவூட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 77 வயதான அமிதாப் பச்சன், தானும் தனது மகனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தனது டுவிட்டர் பதிவினூடாக தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்களில் தாம் பழகிய அனைவரும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, அதிகரித்துவரும் கொரோனா தொற்றினால் இந்தியாவில் நிலவும் பதற்ற நிலைமை மேலும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், நாளை மறுதினம் (14) இரவு 8 மணி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை பெங்களூர் நகர், முழுமையாக மூடப்படுமென கர்நாடகா மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. பெங்களூர் நகரை 8 வலயங்களாக பிரித்து கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அதிகூடிய கொரோனா நோயாளர்கள், பெங்களூர் நகரிலேயே பதிவாகியுள்ளனர். பெங்களூரில் தற்போது 229 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை 36,216 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.