அங்குலான துப்பாக்கிச் சூடு: பரிசோதனை அறிக்கை இன்று

அங்குலான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான பரிசோதனை அறிக்கை இன்று

by Staff Writer 12-07-2020 | 7:29 AM
Colombo (News 1st) அங்குலான பகுதியில் பொலிஸாரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் மொறட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் நாளை (13) அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணை அறிக்கை இன்று (12) கிடைக்கவுள்ளதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். அங்குலான - லுணாவ பகுதியில் பொலிஸாரினால் நடத்தப்பட்ட சோதனையின் போது முச்சக்கரவண்டியில் வருகை தந்த சிலருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அங்குலான பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.