யாழ். சுற்றுச்சூழல் அதிகாரிக்கு வாள்வெட்டு: சுன்னாகத்தைச் சேர்ந்தவர் கைது 

by Staff Writer 11-07-2020 | 4:11 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சுற்றுச்சூழல் அதிகாரி ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட 06 பேரும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சுன்னாகம், இளவாலை, மல்லாகம் மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக யாழ். மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி மீது கடந்த 8 ஆம் திகதி முற்பகல் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மோட்டார் சைக்கிளில் அதிகாரியைப் பின்தொடர்ந்தவர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.