யாழ்ப்பாணம், மன்னாரில் 28 பேர் சுயதனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம், மன்னாரில் 28 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

by Staff Writer 10-07-2020 | 4:53 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 28 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு கடந்த 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டார். யாழ். மாநகரசபை பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களும் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 1 குடும்பமும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, மன்னார் - உப்புக்குளம் பகுதியை சேர்ந்த 14 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து உப்புக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறைக்கைதிகளுடன் பழகிய நபர் என்பதால், விடுதலை செய்யப்பட்டவர் நேற்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வட மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர் கூறினார். இவர்கள் பழகிய 14 பேர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.