by Staff Writer 10-07-2020 | 3:32 PM
Colombo (News 1st) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி, இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ இன்று பகல் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் நியோமால் ரங்கஜீவவை புகைப்படம் எடுக்க முற்பட்ட போதே இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலரைக் கொலை செய்த வழக்கின் முதலாவது பிரதிவாதியாக நியோமால் ரங்கஜீவ பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
கொழும்பு , இலக்கம் -01 மேல் நீதிமன்ற வளாகத்தில் நியோமால் ரங்கஜீவவை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது, ஊடகவியலாளரை அருகிலுள்ள பொலிஸ் காவலரணுக்கு இழுத்துச்சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
வெலிக்கடை சிறைக்கைதிகள் வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ இன்று மாலை முன்னிலையாகவிருந்தார்.
நியோமால் ரங்கஜீவ என்பவர் வழக்கொன்றின் பிரதிவாதியாக உள்ள ஒருவர். இந்நிலையில், ஊடகவியலாளரின் கடமைகளுக்கு நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே அவர் இடையூறு விளைவித்துள்ளார்.