சில அதிபர்கள் மீதான கல்வி அமைச்சின் குற்றச்சாட்டு

சுற்றுநிரூபத்திற்கு மாறாக சில அதிபர்கள் செயற்படுவதாக கல்வி அமைச்சு குற்றச்சாட்டு

by Staff Writer 09-07-2020 | 8:48 AM
Colombo (News 1st) கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கு எதிராக சில அதிபர்கள் செயற்படுவதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது. கல்வியமைச்சு வௌியிட்டிருந்த சுற்றறிக்கைகளுக்கு மாறாக மாகாணக்கல்வி பணிப்பாளர்களால் வேறு சுற்றறிக்கைகள் வௌியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார். இதனால் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் செயற்படுமாறு சுட்டிக்காட்டி, மாகாண ஆளுநர்களுக்கு எழுத்துமூலம் அறிவிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சில அதிபர்கள் ஆசிரியர்களை சேவைக்கு மீள அழைக்கும் செயற்பாட்டில் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த மேலும் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 17 ஆம் திகதி வரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பாடசாலை வளாகத்தில் ஒன்றுகூடுவதை தவிர்ப்பதற்காக, சில ஆலோசனைகள் வௌியிடப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பது தொடர்பிலும் கல்வி அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் சகல ஆசிரியர்களும் கடமைக்கு திரும்ப வேண்டும் என கல்வியமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.