சட்டவிரோத மின் இணைப்பை பெற்றவர்களுக்கு அபராதம்

சட்டவிரோத மின் இணைப்பை பெற்றவர்களிடம் இருந்து 105 மில்லியன் அபராதம் அறவீடு

by Staff Writer 09-07-2020 | 11:40 AM
Colombo (News 1st) சட்டவிரோதமாக மின்சார இணைப்புகளை பெற்றவர்களிடம் 105 மில்லியன் ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இந்த அபராத தொகை அறவிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டார். சட்டவிரோத மின் இணைப்புகள் பெற்றமை தொடர்பில் 1,930 சுற்றிவளைப்புகள் கடந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மீற்றர்களை மாற்றி அமைத்தல், சட்டவிரோதமாக பிரதான மின்கம்பியிலிருந்து மின் இணைப்பை பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணை பிரிவினரால் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, வழக்கு கட்டணமாக 6 மில்லியனுக்கும் அதிக பணம் அறிவிடப்பட்டுள்ளதாகவும் சுலக்‌ஷன ஜயவர்தன மேலும் கூறியுள்ளார். சட்டவிரோதமாக மின் இணைப்புகளைப் பெற்றுக் கொள்பவர்கள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணை பிரிவிற்கு அறிவிக்குமாறு மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.